கடல் விமான சேவை மூன்று வாரங்களுக்கு நிறுத்தி வைப்பு

தற்காலிகமாக நிறுத்தி வைப்பு... குஜராத்தில் கடந்த மாதம் துவக்கி வைக்கப்பட்ட கடல் விமான சேவை 3 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்த விமானத்தை இயக்கும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அவசிய பராமரிப்பு காரணமாக கடல் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதன் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் வசதிகள் மாலத்தீவில் இருப்பதால் அங்கு கடல் விமானம் கொண்டு செல்லப்படுவதாகவும், அகமதாபாத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தளங்கள் இன்னும் கட்டுமானத்திலேயே இருப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 31ந் தேதி இந்த கடல் விமான சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.