வசூலில் அதிரடி வேட்டை நடத்தும் சீதாராமம்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகியுள்ள சீதா ராமம் திரைப்படம் 3 நாட்களில் மட்டும் ரூ.25 கோடி அதிரடி வசூல் வேட்டை நடத்தியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கியுள்ள படம் சீதா ராமம். இந்தப் படத்தின் கதை 1964-ம் ஆண்டு நடப்பது போல் எழுதப்பட்டுள்ளது.

உறவுக்கு யாரும் இல்லாத ராம் என்ற ராணுவ வீரரின் வாழ்க்கையே சீதா ராமம். விடுமுறைக்கு செல்ல வீடே இல்லாத ராணுவ வீரனின் ஒரு செயல், நாட்டில் பல உறவுகளை பெற்றுக்கொடுக்கிறது. அதில் ராமின் மனைவி சீதா என்ற பெயரில், முகவரி இல்லாத கடிதம் வருகிறது. அந்த சீதாவை காதலிக்க தொடங்கும் ராம், அவளை தேடி புறப்படுகிறான். இறுதியில் என்ன ஆனது என்பதை அழகான திரைக்கதையில் படமாக்கியுள்ளார் இயக்குநர்.

3 நாட்களில் மட்டும் சீதா ராமம் திரைப்படம் ரூ. 25 கோடி அளவுக்கு வசூலித்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் சற்று நீளமாக செல்கிறதோ என்ற உணர்வை ஒரு இடத்தில் கொடுக்கலாம். ஆனால் அடுத்து என்னவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். அது படத்தின் வெற்றிக்கு உதவுகிறது.

படத்திற்கு ரிப்பீட் ஆடியன்ஸ் இருப்பதால் இந்த வாரமும் நல்ல வசூலை சீதா ராமம் படம் பெறும் என்று சினிமா வல்லுனர்கள் கருதுகின்றனர்.