மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ந்தேதிக்குள் அனுப்ப கல்வித்துறை உத்தரவு

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விவரத்தை 7-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன், அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20-ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி வரையிலான நிலவரப்படி, சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையை தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் 2020-21-ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12-ம் வகுப்பு வரையில் வருகிற 30-ந்தேதி வரை நிலவரப்படி சேர்க்கப்பட்ட மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் தயாரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனை தொகுத்து பள்ளிக்கல்வி இயக்குனரின் மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 7-ந்தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கும்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.