தூத்துக்குடியில் சிறிய கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள் நேற்று திறப்பு

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அன்று முதல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள், பூங்காக்கள், கடற்கரைகள், உடற்பயிற்சி கூடங்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

சில மாதங்களுக்கு பிறகு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிராமப்புறங்களில் உள்ள கோவில்கள் ஏற்கனவே திறக்கப்பட்டன. தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள சிறிய கோவில்களை திறப்பதற்கும், உடற்பயிற்சி கூடங்களை திறப்பதற்கும் அரசு தளர்வு அளித்து உள்ளது.

அதன்படி தூத்துக்குடியில் உள்ள சிறிய கோவில்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வழிபாடு செய்தனர். இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்களும் நேற்று திறக்கப்பட்டன.

நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. உடற்பயிற்சி கூடத்தில் உள்ள உபகரணங்கள் அனைத்தும் உரிய சமூக இடைவெளியுடன் அமைக்கப்பட்டு இருந்தன.

உடற்பயிற்சி செய்ய வருபவர்கள் கிருமிநாசினியால் கைகளை சுத்தம் செய்த பிறகு உடற்பயிற்சி கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். வெளியில் செல்லும்போதும் கைகளை சுத்தம் செய்து சென்றனர். அதே நேரத்தில் உடற்பயிற்சிக்கான உபகரணங்களும் அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. ஆனால் நேற்று உடற்பயிற்சி கூடங்களுக்கு குறைந்த அளவிலேயே மக்கள் வந்து உடற்பயிற்சி செய்து சென்றனர். இதேபோல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளும் நேற்று முதல் திறக்கப்பட்டன.