சமூக சேவகர் பாலம் கலியாணசுந்தரம் சேவையை பாராட்டி குடியிருப்பு வழங்கல்

சென்னை: சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில் குடியிருப்பை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

சிறந்த சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரம் தான் கல்லூரியில் நூலகராகப் பணியாற்றிய காலத்தில் பெற்ற ஊதியம், ஓய்வூதியம், குடும்ப சொத்து மற்றும் விருதுகள் மூலம் கிடைத்த அனைத்தையும் தொண்டு பணிகளுக்கே வழங்கியதோடு, ‘பாலம்’ என்ற அமைப்பினைத் தொடங்கி நீண்ட காலமாக மக்களின் சமூக, பொருளாதார மேம்பாட்டுக்காகவும், குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காகவும் பணியாற்றி, இந்திய அரசின், ‘பத்மஸ்ரீ’ விருது மற்றும் அமெரிக்க அரசின், ‘ஆயிரம் ஆண்டுகளில் சிறந்த மனிதர்’ (Man of Millennium) என்ற விருதையும் பெற்று இருக்கிறார்.

சமூக சேவகர் ‘பாலம்’ பா.கலியாணசுந்தரத்தின் சேவையைப் பாராட்டி, அவரை கெளரவிக்கும் வகையில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சென்னை, திருமங்கலம் என்.வி.என். நகர் திட்டப்பகுதியில் குடியிருப்பு ஒன்றினை ஒதுக்கீடு செய்து, பயனாளி பங்குத் தொகையினையும் அரசே ஏற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த குடியிருப்பு ஒதுக்கீட்டுக்கான ஆணையை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘பாலம்’பா.கலியாணசுந்தரத்திடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் பொ.சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.