ஆன்லைன் வகுப்புகளை கவனிக்க மலைக் கிராமத்திற்கு மொபைல் டவர்; நடிகர் சோனுசூட் அதிரடி

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளி, கல்லூரி வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இதனால் மலை கிராமங்கள் மற்றும் இணைய வசதியே இல்லாத ஏழை மாணவர்களின் நிலைமை கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்நிலையில் ஆன்லைன் வகுப்பிற்கு சிக்னல் கிடைக்காமல் ஹரியாணாவை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் மரத்தில் ஏறி பாடங்களை கவனித்து வந்ததாக சமூக வலைத்தளத்தில் தகவல் வெளியானது.

இத்தகவலை அடுத்து ஹரியாணாவைச் சேர்ந்த அந்த மலைக் கிராமத்திற்கு நடிகர் சோனுசூட் ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் வகையில் மொபைல் டவர் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார். இதற்கு முன்பும் நடிகர் சோனுசூட் கொரோனா நேரத்தில் ஏழைகளுக்கு பல்வேறு வகைகளில் உதவி புரிந்தார். குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்லமுடியாமல் தவித்தபோது அவர்களுக்காக சிறப்பு பேருந்தை ஏற்பாடு செய்தது.

வேலைக் கிடைக்காமல் தவித்து வந்த சிலருக்கு மீண்டும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. கர்நாகாவில் பெற்ற மகள்களையே எருதாக வைத்து வயலை உழுத விவசாயிக்கு டிராக்டர் வாங்கிக் கொடுத்தது. சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் தவித்து வந்த தமிழகத்தை மருத்துவ மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் அழைத்து வந்தது.

ஆன்லைன் வகுப்பை கவனிக்க செல்போன் இல்லாமல் தவித்து வந்த சிலருக்கு செல்போன் வாங்கிக் கொடுத்தது என இவரின் கருணை உள்ளத்தின் பட்டியல் நீண்டு கொண்டே போகும். அந்த வகையில் தற்போது மலை கிராமம் ஒன்றிற்கு சொந்தமாக மொபைல் டவரையே ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். இவருடைய மனித நேயத்தைப் பாராட்டி ஐ.நா சிறப்பு விருதினை வழங்கி கவுரவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.