தடுமாறும் அரசு மருத்துவமனை; பணத்தில் குளிக்கும் தனியார் மருத்துவமனைகள்

பணக்குவிப்பில் தனியார் மருத்துவமனைகள்... சேலத்தில் அரசு மருத்துவமனையில் நிலவும் இட நெருக்கடியையும். படுக்கை பற்றாக்குறையையும் பயன்படுத்தி, பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து அங்கு வென்டிலேட்டர்களை பொருத்தி கொரோனாவுக்கு சிகிச்சை என்று லட்சங்களை குவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே அதிக நோயாளிகள் கொரோனா சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்படுவதாகவும், மாவட்ட மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதி இருந்தும் காலியாக காணப்படுவதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

அந்தவகையில் சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அரசு மாவட்ட மருத்துவமனையில் 100 படுக்கைகளுக்கும் மேலாக காலியாக உள்ள நிலையில், அங்குள்ள மருத்துவர்கள் தங்களிடம் வரும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் ஆம்புலன்ஸில் ஏற்றி மோகன் குமாரமங்கலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

இதே நிலைதான் மற்ற தாலுகா மருத்துவமனைகள் மற்றும் தலைமை ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் தலைமை அரசு மருத்துவமனையில் படுக்கைகள் நிறைந்து பற்றாக்குறையால், கொரோனா நோயாளிகளை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு திருப்பி அனுப்பும் நிலை உள்ளது.

சேலத்தில் இயங்கும் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள், சாதாரண தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து அங்கு வெண்டிலேட்டர்களை பொருத்தி கொரோனாவுக்கான சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தனியாரால் தங்கும் விடுதிகளில் சுவாசக் கருவிகளை பொருத்தி கொரோனா சிகிச்சை மேற்கொள்ள முடிகிற போது, மாவட்ட மற்றும் தாலுகா அரசு மருத்துவமனைகளில் சுவாச கருவிகளுடன் கூடுதல் படுக்கை வசதிகளை சுகாதாரதுறையினர் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.