நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரிக்கு 3-வது முறையாக சம்மன்

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகியோர் பிற மதத்தினர் இடையே பகையை தூண்டும் வகையில் டுவிட்டரில் பதிவிட்டு இருந்ததாக அவர்கள் மீது திரைப்பட காஸ்டிக் இயக்குனர் முனாவர் அலி என்பவர் மும்பை பாந்திரா மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன்பேரில் பாந்திரா போலீசார் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து விசாரணைக்கு ஆஜராகுமாறு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இந்தநிலையில் அவர்கள் இருவருக்கும் பாந்திரா போலீசார் 3-வது முறையாக சம்மன் அனுப்பி உள்ளனர்.

அதன்படி நடிகை கங்கனா வருகிற 23-ந் தேதியும், அவரது சகோதரி வருகிற 24-ந் தேதியும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.