ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு... கமல் அறிவிப்பு

சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் நிபந்தனையற்ற ஆதரவை அளிக்கிறது. மேலும், இந்த இடைத் தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர் கட்சி தலைவர் கமல் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் இறந்ததைத் தொடர்ந்து அந்தத் தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த இடைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவர், அந்தத் தொகுதியின் மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகனின் தந்தை.

இடைத்தேர்தலில் போட்டியிடும் இளங்கோவன் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்து தமக்கு ஆதரவு கோரி வந்தார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோரி இருந்தார். கமல்ஹாசன் தமது இயக்க நிர்வாகிகளுடன் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறியிருந்தார்.