கர்நாடகத்தில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணை வந்தடைந்தது

மேட்டூர் அணையை வந்தடைந்தது... கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள உபரி நீர் இன்று மாலை 5 மணியளவில் மேட்டூர் அணை வந்தடைந்தது. இன்று காலை அணைக்கு விநாடிக்கு 3,625 கனஅடியாக இருந்த நீர் வரத்து, தற்போது, விநாடிக்கு 6,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.

கேரளா மற்றும் கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில், தென்மேற்குப் பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, காவிரியின் துணை ஆறுகளில் ஒன்றான கபினியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கபினி நிரம்பியுள்ளது. எனவே, கபினி அணைக்கு வரும் வெள்ளம் உபரி நீராக, காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது.

காவிரியில் திறக்கப்பட்ட நீர், தற்போது மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு இன்று (ஆக.6) காலை நீர்வரத்து விநாடிக்கு 3,613 கனஅடியாக இருந்த நிலையில், உபரி நீர் வரத்து காரணமாக இன்று மாலை 5 மணி நிலவரப்படி விநாடிக்கு 6,000 கனஅடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 3,000 கனஅடி வீதம் நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கான நீர் வரத்து, தற்போதைய நிலையில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. எனவே, அணையின் நீர் மட்டம் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. அணையின் நீர் மட்டம் இன்று காலை 64.20 அடியாகவும், நீர் இருப்பு 27.91 டிஎம்சியாகவும் இருந்தது.