அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்தது .. அமைச்சர் சிவசங்கர்

சென்னை: தமிழகத்தில் உள்ள 8 போக்குவரத்து கழகங்களில் மொத்தம் சுமார் 1.25 லட்சம் பேர் பணிபுரிந்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் இவர்களின் 14வது ஊதிய ஒப்பந்தம் 1.9.2019 ஆம் ஆண்டு அமலாகி இருக்க வேண்டும்.

இதையடுத்து இதற்கான 7வது சுற்று பேச்சுவார்த்தை சென்னை குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மையத்தில் நடைபெற்றது. இதில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் பல்வேறு முக்கிய அறிவிப்பு குறித்து பேசினார்.

அதில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு 5 சதவிகித ஊதிய உயர்வு அளிக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் அரசு ஓட்டுநருக்கு குறைந்தபட்ச ஊதிய உயர்வு ரூ.2012 ஆகவும், அதிகபட்சமாக ரூ.7,981 ஆக நிர்ணயிக்கப்பட்டு கையெழுத்தானது. அதே போன்று நடத்துநருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,965, அதிகபட்சமாக ரூ.6,640-க அதிகரிக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது பற்றி அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ஓய்வூதிய குடும்பத்தினருக்கு இலவச பயண சலுகை வழங்கப்படும் எனவும், பணியின் போது உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு நிதியாக பணி ஒன்றுக்கு ரூ.300 வழங்கப்படும் எனவும் போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.