தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் குறைவான மழை பொழிவு

வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் அதிகளவு மழைப்பொழிவு இருக்கும். அந்த வகையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தொடர்ந்து பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புரெவி புயல் வலுவிழந்த நிலையில் இருந்தாலும், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழை கொட்டியது.

நேற்று முன்தினம் காலை 8.30 மணி வரை தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் பதிவாகும் இயல்பான மழை அளவை விட 16 சதவீதம் குறைவாகவே மழை பெய்திருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேர மழை நிலவரப்படி தமிழகத்தில் இயல்பைவிட 2 சதவீதம் மட்டுமே குறைவான மழை பெய்துள்ளது.

அதன்படி பார்க்கும்போது ஒரே நாளில் 14 சதவீதம் மழை பெய்திருக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் 1-ந் தேதி முதல் நேற்று வரை 36.4செ.மீ. மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.