உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் 6வது முறையாக தமிழகம் முதலிடம்; அமைச்சர் விஜயபாஸ்கருக்கு விருது

இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பை கடந்த 2014ம் ஆண்டு டிசம்பர் 12ந் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவாக்கினார். அதன் பயனாக, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் முன்னோடி மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது.

இதன்படி, கடந்த ஆகஸ்டு வரையில், தமிழகத்தில் 1,382 கொடையாளர்களிடம் இருந்து 8 ஆயிரத்து 163 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு உள்ளன. ஏழை-எளிய மக்கள், அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது.

உடல் உறுப்பு தானம் மற்றும் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக தமிழகம் முதலிடம் வகித்து, மத்திய அரசின் விருதுகளை பெற்றுள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகளின் நலனை கண்காணித்து, அறுவை சிகிச்சை செய்த ஆஸ்பத்திரிகளில் இருந்து அதற்கான விவரங்களை குறிப்பிட்ட கால இடைவெளியில் பெற்று, ஆய்வு செய்ய 10 ஆண்டுகளுக்கான தரவுகளை தேசிய அளவில் சேகரித்த முதல் மாநிலமாகவும் தமிழகம் திகழ்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் ஆறாவது முறையாக தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக, தமிழக சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு சார்பில் விருது வழங்கப்படுகிறது. இதனை மத்திய சுகாதார துறை மந்திரி ஹர்ஷவர்தன் இன்று வழங்குகிறார். இந்த விருதினை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பெற்று கொள்கிறார்.