ராமநாதபுரத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் மற்றும் முத்துராமலிங்க தேவர் குருபூஜையை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தொடங்கி, அக்டோபர் 31 வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார். இதனால் வெளிமாவட்ட வாடகை வாகனங்கள் ராமநாதபுரத்தில் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனை அடுத்து 144 தடை உத்தரவு காலத்தில் பொதுக் கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தவும், பொது இடங்களில் 5 பேர் மற்றும் அதற்கு மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அத்துடன் சொந்த வாகனங்களில் வருவோர் அந்தந்த டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதி சீட்டு பெற்றுவர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் அமைத்துக் கொண்டோ, பேனர்கள் கட்டிக்கொண்டோ வரக்கூடாது. வழிகளில் பட்டாசுகள் வெடிக்கவோ மேற்கூரைகளில் பயணிக்கவோ அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக இமானுவேல் சேகரன் நினைவு தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.