கணவர் இறந்த அதிர்ச்சியில் ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை

கொரோனா பரிசோதனைக்கு சென்ற கணவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததையடுத்து அதிர்ச்சியில் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் லட்சுமிகாலனியை சேர்ந்தவர் பிரபாகரன். ரெயில்வே துறையில் அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கொரோனா அறிகுறியுடன் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இவருக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இவர் அரசு ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கிடையே பிரபாகரனுக்கு கொரோனா அறிகுறி இருந்ததாக கூறப்பட்டதால் அவரது மனைவி ரமாபிரபா (வயது 47) வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். விருதுநகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய இவர் நேற்று காலை கணவர் உயிரிழந்த தகவல் கேட்டு அதிர்ச்சி அடைந்தார்.

பிரபாகரனின் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு விருதுநகர் மயானத்திற்கு நேரடியாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் முடிந்த நிலையில், கணவர் இறந்த துக்கம் தாங்காத ஆசிரியை ரமாபிரபா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆசிரியை தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.