பீகார் முதல்-மந்திரியாக தேஜஸ்வி யாதவ் ஆனால் ஆச்சரியப்பட மாட்டேன் - சஞ்சய் ராவத்

பீகார் மாநிலத்தில் தற்போது தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அடுத்து இனி 2 கட்ட தேர்தல்கள் நடைபெறவுள்ளன. சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவுத் எம்.பி. புனேயில் நடந்த நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய சஞ்சய் ராவுத், பீகார் முதல்-மந்திரியாக ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை சேர்ந்தவரும், முன்னாள் மத்திய மந்திரி லல்லு பிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பதவி ஏற்றால் ஆச்சரியப்பட மாட்டேன் என கூறினார்.

இதுகுறித்து சஞ்சய் ராவுத் கூறுகையில், எந்த ஒரு ஆதரவும் இல்லாத இளைஞர் ஒருவர் (தேஜஸ்வி யாதவ்) உள்ளார். சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு போன்ற விசாரணை முகமைகள் அவரை வேட்டையாடுகின்றன. ஆனாலும் எதிர்க்கட்சிகளை நசுக்கி வரும் மத்திய அரசுக்கு அவர் சவாலாக உள்ளார். எனவே அவர் பீகாரின் முதல்-மந்திரி ஆனால் நான் ஆச்சரியப்படபோவதில்லை என்று கூறினார்.

மேலும் அவர், மராட்டியத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினைகள் குறித்து கவர்னரை சந்திப்பதைவிட்டு, சம்மந்தப்பட்ட மந்திரிகளை சந்தித்து முறையிடலாம். நேரடியாக கவர்னரை சந்திப்பது மாநிலத்தை அவமதிப்பது போன்றதாகும். சரத்பவார் மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அதை பற்றி யாரும் கவலைப்படவேண்டிய தேவையில்லை என கூறினார்.

பீகார் மாநில தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போது அங்கு தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தங்களது வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.