பாஜக தலைவர் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது - ஜே.பி.நட்டா

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள பந்திபோரா மாவட்டத்தின் பா.ஜ.க தலைவராக இருந்த ஷேக் வாசிம் பாரிக்கு பந்திபோராவில் சொந்தமாக கடை ஒன்று உள்ளது. இந்நிலையில் தனது கடையில் அப்பா மற்றும் சகோதரர் ஆகியோருடன் ஷேக் வாசிம் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் அவர்கள் மீது சரமாரியாக சுட்டனர். இதனால் ஷேக் வாசிம் பாரி உள்பட 3 பேரும் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 8 போலீசார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது பா.ஜ.க. தலைவர் குடும்பத்தினர் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கோழைத்தனமானது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஷேக் வாசிம் பாரி குடும்பத்தினர் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலால் அவர்களை நாம் இழந்துள்ளோம். இது கட்சிக்கு மிகப்பெரிய இழப்பாகும். அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர்களுக்கு கட்சி எப்போதும் துணைநிற்கும். அவர்களின் தியாகம் வீணாகாது என உறுதியளிக்கிறேன் என ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மேலும், சுட்டுக் கொல்லப்பட்ட காஷ்மீர் பா.ஜ.க. தலைவர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.