ஆட்சியை கலைக்க முடிவெடுத்த பெரு அதிபர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு

பெரு: ஆட்சியை கலைக்க முடிவெடுத்த பெரு நாட்டின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெரு நாட்டில் ஆட்சி கலைக்கப்பட்டு, புதிய தேர்தலை நடத்த முயற்சித்த சமயத்தில் அதிபர் நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். இதுகுறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், அதிபருக்கு ஆதரவாக 6 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. மாறாக அவரை எதிர்த்து 101 வாக்குகள் கிடைத்திருக்கிறது.

இதனால் அதிபர் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மேலும் காவல்துறையினர் அவரை கைது செய்து விட்டனர். இதனால் துணை அதிபராக இருக்கும் Dina Boluarte, இனி அதிபர் பதவிக்கு வருவார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது அதிபர் பெட்ரோ காஸ்டிலோ, தற்போது உள்ள ஆட்சி கலைக்கப்பட வேண்டும், அதற்கு பதிலாக புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

எனவே முக்கிய அமைச்சர்கள் பலரும் தங்கள் பதவியிலிருந்து விலகி விட்டனர். இந்நிலையில் அதிபர் ஆட்சியை கலைப்பதற்கு செய்த நடவடிக்கைகள், அரசியல் சட்டத்திற்கு எதிராக இருப்பதாக ராணுவம் மற்றும் காவல் துறை அவரை எச்சரித்தது. அதற்குப் பின் அதிபரிடம் கடந்த வாரத்தில் இது பற்றி நாடாளுமன்றம் விளக்கம் கோரியது.

இது மட்டுமல்லாமல் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை வைத்து அவர் தனிப்பட்ட முறையில் சொத்துக்கள் வைத்திருப்பதாகவும், சட்டவிரோதமான முறையில் ஒரு அமைப்பை இதற்காக அவர் நடத்தி வந்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால் அதிபர் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய், ஆட்சியைப் பிடிப்பதற்காக சிலர் சதி மேற்கொள்கிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

எனினும், ஆட்சியை கலைக்கப்போவதாக அவர் வெளியிட்ட அறிவிப்பால், கூட்டணி கட்சியினர் அவரை கைவிட்டனர். முக்கிய அமைச்சர்களும் பதவி விலகிவிட்டார்கள்.