லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை பார்வையிட்டார் முதலமைச்சர்

முதலமைச்சர் பார்வை... சுமார் 42 ஆண்டுகளுக்கு முன்பு நாகையில் மாயமாகி லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சுவாமி சிலைகளை முதலமைச்சர் பார்வையிட்டார்

லண்டனில் இருந்து மீட்டு வரப்பட்ட ராமர், சீதை, லட்சுமணன் சாமி சிலைகளை ஏற்கெனவே அச்சிலைகள் இருந்த நாகை மாவட்டம் அனந்தமங்கலத்திலுள்ள ராஜகோபால பெருமாள் கோயில் செயல் அலுவலரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒப்படைத்தார்.

விஜயநகர பேரரசு காலத்தில் கட்டப்பட்ட அக்கோயிலில் இருந்து கடந்த 1978ம் ஆண்டு திருட்டு போன அச்சிலைகள், லண்டனில் இருப்பது தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மீட்டு வரப்பட்ட சிலைகள், சென்னையில் முகாம் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அந்த சிலைகளை பார்வையிட்ட முதலமைச்சர், அதை கோயில் செயல் அலுவலரிடம் ஒப்படைத்தார். பின்னர் சிலைகள் மீட்க காரணமாக இருந்த தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரையும் முதலமைச்சர் வெகுவாக பாராட்டினார்.