தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியது எப்படி? சுகாதாரத்துறை செயலாளர் விளக்கம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் முதல் வேகமாக பரவி வந்தது. ஆரம்பத்தில் வெளிநாடு சென்று திரும்பிய காஞ்சிபுரத்தைச் சேர்ந்த என்ஜினீயர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மளமளவென கொரோனா பரவியது. கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள தொடங்கியது. ஆனாலும் கொரோனா வைரஸ் பரவுவது தடுக்க முடியாமல் போனது.

இதனால் மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. ஆனாலும் கடந்த ஜூன் மாதம் வரை கொரோனா பரவுவதை கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாகவே இருந்தது. தினமும் 120-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி வந்தனர். தினமும் 2,500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. இதனால் இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாக மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக தமிழகத்தில் கொரோனா பரவுவது வெகுவாக குறைந்து விட்டது.

இதுகுறித்து சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் எந்த அளவுக்கு வேகமாக பரவியதோ, அதே அளவுக்கு இப்போது வேகமாக குறைந்து வருகிறது. இதற்கு காரணம் மக்களின் ஒத்துழைப்பு என்றுதான் கூற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறையினர் எடுத்துக்கொண்ட பல்வேறு முயற்சிகளும் இதற்கு பலன் அளிப்பதாக இருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்த வீதிக்கு வீதி காய்ச்சல் முகாம்களை நடத்தியது பெரிதும் பலன் கொடுத்துள்ளது. களப்பணியாளர்கள் வீடு தோறும் சென்று கணக்கெடுப்பு செய்து யார்-யாருக்கு எல்லாம் நோய் அறிகுறி உள்ளது என்பதை கேட்டறிந்து அவர்களை சிகிச்சைக்கு உட்படுத்துமாறு விழிப்புணர்வுகளை உருவாக்கினர்.

இதனால் பொதுமக்கள் அனைவரும் தங்களை தாங்களே தயார் படுத்திக்கொள்ளும் அளவுக்கு மன தைரியத்துக்கு வந்தனர். நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் சத்தான உணவுகளை சாப்பிடுவது, கபசுர குடிநீர் அருந்துவது போன்றவை உட்கொண்டதன் பலனாக பொதுமக்கள் ஒவ்வொருவருக்கும் தற்போது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து விட்டது. சமூக இடைவெளியையும் பலர் கடைபிடித்து வருகின்றனர். பலரும் முக கவசம் அணிந்து வருகின்றனர். இதுவும் கொரோனாவை கட்டுப்படுத்த காரணமாக இருந்தது.

ஒருசிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு வந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக அவர்கள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பி விடுகிறார்கள். ஆரம்பத்தில் சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால் இப்போது 300-க்கும் கீழ் குறைய தொடங்கி விட்டது. சில மாவட்டங்களில் 10 முதல் 15 பேர் வரை மட்டுமே கொரோனா பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களும் விரைவில் குணம் அடைந்து விடுகிறார்கள்.

ஒவ்வொரு மாநிலத்திலும் பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. அதேபோல் தமிழ்நாட்டிலும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகரித்து விடும் என்று பலர் அச்சப்பட்டு வந்தனர். ஆனாலும் அரசு சொன்ன வழிமுறைகளை பலர் கடை பிடித்ததன் காரணமாக கொரோனா அதிகரிக்கவில்லை. இது மிகப்பெரிய ஆறுதலான வி‌ஷயமாகும்.

தற்போது கொரோனா குறைந்து விட்டது என்பதற்காக பரிசோதனைகளை குறைக்க கூடாது என்று மாவட்ட நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். கொரோனா நோயை முற்றிலுமாக ஒழிப்பதை கொள்கையாக கொண்டு செயல்பட பல்வேறு வழிமுறைகளை வகுத்து கொடுத்துள்ளோம். அதன்படி நோய் தடுப்பு பணிகளை குறைக்க கூடாது. தொடர்ந்து அந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம் என அவர் கூறினார்.