ஜார்ஜ் பிளாய்டு கொல்லப்பட்டதால் மினியாபோலிஸ் காவல்துறையை கலைக்க முடிவு

அமெரிக்காவில் உள்ள மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25 ஆம் தேதி கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்டு என்பவர் போலீஸ் பிடியில் சிக்கி கொல்லப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு நீதி வழங்க வேண்டுமென அமெரிக்காவில் கருப்பின மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

பல ஆண்டுகளாக கருப்பினத்தவர்கள் அடக்குமுறையை சந்தித்து வருவதால் இந்த போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் பல்வேறு நகரங்களில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஜார்ஜ் பியாய்டு இறப்புக்கு காரணமான போலீஸ் அதிகாரி மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டும் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தினால் காவல்துறைக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. இதனை போக்கும் வகையில், மினியாபோலிஸ் காவல்துறை கலைக்கப்பட்டு மீண்டும் கட்டமைக்கப்படும் என நகர கவுன்சிலர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கவுன்சில் தலைவர் லிசா பெண்டர் கூறுகையில், சமூக பாதுகாப்பின் புதிய மாதிரியை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.