மெட்ரோ ரயில்களில் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுக்கும் வசதி இன்று முதல் அறிமுகம்

சென்னை: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில் தினமும் பல ஆயிரக்கணக்கான மக்கள், பயணம் செய்து பயனடைந்து கொண்டு வருகின்றனர்.

சென்னையில் கூட்ட நெரிசலை குறைக்கவும், குறைவான நேரத்தில் பயணிக்கவும் ஏதுவாக அமைந்துள்ளது மெட்ரோ ரயில். சென்னையில் மெட்ரோ ரயில் விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையிலும், சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகிறது.

இதனை அடுத்து மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட் எடுப்பதற்காக பயண அட்டை முறை, க்யூ ஆர் கோடு மூலம் தங்கள் பயண சீட்டுகளை பெற்று வரும் நிலையில், தற்போது வாட்ஸ் அப் வாயிலாக எளிமையாக டிக்கெட் எடுக்கும் வசதி இன்று முதல் அறிமுகப்படுத்தப்படுகிறது.

எனவே வீட்டில் இருந்தபடியே அல்லது அலுவலகத்தில் இருந்தோ கிளம்பும்போது மெட்ரோ ரயில் நிர்வாகம் கொடுக்கும் செல்போன் எண்ணிற்கு புறப்படும் இடம் மற்றும் சேருமிடத்தை அனுப்பி யுபிஐ- யின் மூலம் கட்டணத்தை செலுத்தி டிக்கெட்டை பெறலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது . மேலும் அத்துடன் வாட்ஸப் நம்பருக்கு வரும் க்யூ ஆர் கோர்டை பயணத்தின் போது ஸ்கேன் செய்து பயணிக்கலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.