போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி... பிரம்பால் அடித்தே போலீசார் கொன்றதாக குற்றச்சாட்டு

ஈரான்: ஈரானில் நடந்த அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது மேலும் ஒரு இளம்பெண் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டால் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

சரினா எஸ்மாயில்சாதே என்ற 16 வயது இளம்பெண் செப்டம்பர் 21ம் திகதி பொலிசாரால் அடித்தேக் கொல்லப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த விவகாரம் தொடர்பில் குடும்பத்தினர் பேசாமல் இருக்க நெருக்கடி அளிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. ஈரானில் பெண்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அக்கிரமங்களை தமது சமூக ஊடக பக்கமூடாக எஸ்மாயில்சாதே அம்பலப்படுத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில் தான் சமீபத்தில் அரசுக்கு எதிரான பொதுமக்கள் போராட்டத்தில் அவர் கலந்துகொண்டுள்ளார். அரசு தரப்பில் தற்போது அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.

ஆனால் சமூக ஆர்வலர்கள் அந்த கூற்றை மறுத்துள்ளதுடன், எஸ்மாயில்சாதேவின் இறப்பை மூடி மறைக்க அரசு முயல்வதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். பொலிசார் பிரம்பால் அடித்து கொன்றதாகவே எஸ்மாயில்சாதேவின் நண்பர்கள் தெரிவிக்கின்றனர். அவர் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக இறந்திருக்கலாம் என்றே நம்பப்படுகிறது.