முன்னாள் ஜனாதிபதிக்கு நிச்சயம் பதவி வழங்கப்படும்; அமைச்சர் தகவல்

நிச்சயம் பதவி வழங்கப்படும்... முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தற்போதைய அரசாங்கத்தில் ஒரு குறிப்பிடத்தக்க பதவி நிச்சயம் வழங்கப்படும் என்று நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எல்பிட்டியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினையும் ஒரே கட்சியாக இணைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு புதிய அமைச்சரவையில் எந்த அமைச்சுப் பதவியும் கிடைக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்குவதற்காக முன்மொழியப்பட்டு இருந்த அமைச்சுப் பதவியை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினருக்கு வழங்குமாறு அவர் தெரிவித்திருந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இதற்கமைய சுற்றுச்சூழல் அமைச்சுப் பதவியானது மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததாகவும் அதன் பின்னர் அந்த அமைச்சுப் பதவி மஹிந்த அமரவீரவுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.