சுயமரியாதை இருந்தால் பதவியில் தொடர்வது குறித்து கவர்னர் யோசிப்பார் - சரத்பவார்

மகராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறப்பது குறித்து கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி சமீபத்தில் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு கடிதம் எழுதினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த கடிதத்தில் அவர் முதல் மந்திரி உத்தவ் தாக்கரேயை திடீரென மதச்சார்பின்மைக்கு மாறிவிட்டீர்களா என கேட்டு இருந்தார்.

இதற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயும் பதிலடி கொடுத்து கடிதம் அனுப்பினார். இதனால் அரசியல் சாசனத்தின் கீழ் செயல்படும் கவர்னர் மற்றும் முதல்-மந்திரி இடையே மதச்சார்பின்மை மற்றும் இந்துத்வா கொள்கை விவகாரத்தில் மோதல் ஏற்பட்டது.

தற்போது, உஸ்மனாபாத் மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆய்வு செய்தார். அப்போது அவர் பேட்டி அளிக்கையில், கவர்னர், முதல் மந்திரிக்கு எழுதிய சர்ச்சைக்குரிய கடிதம் குறித்து கடுமையாக தாக்கினார்.

அப்போது பேசிய அவர், முதல்-மந்திரிக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில் உள்ள வார்த்தைகள் குறித்து உள்துறை மந்திரி அமித்ஷா அதிருப்தி தெரிவித்துள்ளார். சுயமரியாதை உள்ள எவரும் இனிமேல் அந்தப் பதவியில் தொடரலாமா அல்லது வேண்டாமா என யோசிப்பார் என கடுமையாக கூறியுள்ளார்.