ஊரடங்கிற்கு பின் 8 காட்சிகள் திரையிட அனுமதியளிக்க அரசுக்கு யோசனை

ஊரடங்கு நிறைவுக்கு பின் தினமும் 8 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்தினால் ரசிகர்கள் எப்போது வேண்டுமானாலும் படம் பார்க்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.டி.டி. எனப்படும் இணைய தளங்கள், ஊரடங்கைப் பயன்படுத்தி, தமிழ் சினிமா உலகில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆரம்பித்துள்ளது. ஊரடங்கு அமலுக்கு வருவதற்கு முன்பு, திரையரங்குகள் தான், சினிமா தயாரிப்பாளர்களின் முதல் 'சாய்ஸ்'.

தியேட்டர்களில் தங்கள் சினிமா ஓரளவு ஓடிய பின்னர், இணைய தளங்களுக்கு, படங்களை விற்றனர். ஊரடங்கின் போது பிறப்பிக்கப்பட்ட பல உத்தரவுகள், தளர்த்தப்பட்டு, ஓரளவு சகஜ நிலை திரும்பி விட்டது. சிகப்பு மண்டலங்களில் கூட மதுக்கடைகளைத் திறந்து விட்டார்கள்.



ஆனால் தியேட்டர்கள் திறக்கப்படுவதற்கான அறிகுறிகள் தெரியாததால் , பெரிய பட்ஜெட் படங்களும், நேரடியாக ஓ.டி.டி. தளங்களில் ரிலீஸ் ஆக ஆரம்பித்துள்ளன. தியேட்டர்களை மீண்டும் உயிர்ப்புடன் வைத்திருக்க, திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் பல்வேறு, யோசனைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

ஏ.ஜி.எஸ். சினிமாஸ் தலைமை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி, தமிழக அரசுக்கு ஒரு புதிய யோசனையைத் தெரிவித்துள்ளார். சினிமா தியேட்டர்களில் அதிகாலை முதல் திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்'' என்பதுதான் அவரது கோரிக்கை.

''இந்த திட்டம் செயல் வடிவத்துக்கு வந்தால் தினம் தோறும் தியேட்டர்களில் 8 காட்சிகளை திரையிடலாம். நினைத்த நேரத்தில் ரசிகர்கள் படம் பார்க்க வரலாம். தியேட்டர்களும் நஷ்டத்தில் இருந்து தப்பிக்கும்'' என்கிறார் அர்ச்சனா கல்பாத்தி.