சவுதி அரேபிய மன்னர் அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினார்

கடந்த 2015ம் ஆண்டு முதல் சவுதி அரேபியாவில் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மன்னராக இருந்து வருகிறார். 84 வயதான சல்மான், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 20-ந் தேதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பித்தப்பை அழற்சி ஏற்பட்டுள்ளதால், தலைநகர் ரியாத்தில் உள்ள சிறப்பு ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சை பெற்று வருவதாக ராயல் கோர்ட்டு தெரிவித்திருந்தது.

தற்போது மன்னர் சல்மானுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை லேபராஸ்கோபிக் எனப்படும் குறைந்த ஆபத்துடைய செயல் முறையில் மேற்கொள்ளப்பட்டதாக கிங் பைசல் ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பின் தற்போது மன்னர் சல்மானின் உடல்நிலை நல்ல முறையில் தேறியது. இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். சவுதி அரேபியா மக்கள் நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடினர்.

இந்த நன்னாளில், மன்னர் சல்மான் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நல்ல செய்தி கிடைத்துள்ளதாக
ராயல் கோர்ட்டு தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல் நலத்துடன் திரும்பியதற்கு மக்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.