அதிபரை சிறைப்பிடித்து ஆட்சியை கைப்பற்றியது நைஜர் ராணுவம்

நைஜர்: ஆப்பிரிக்க நைஜர் நாட்டில் அதிபரை சிறைபிடித்து ஆட்சியைக் கைப்பற்றியது ராணுவம். ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடந்த பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜரில், ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட அதிபர் பசூமிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைக்கப்படாவிட்டால் தாக்குதல் நடத்துவோம் என மேற்கு ஆப்பிரிக்க நாடுகளின் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது.

ராணுவ ஆட்சிக்கு பெரியளவில் எதிர்ப்பு தெரிவிக்காத நைஜர் நாட்டு மக்கள், விளையாட்டரங்கம் ஒன்றில் நடத்திய கூட்டத்தில் பங்கேற்று அங்கு வெளியிடப்பட்ட புதிய அறிவிப்புகளுக்கு முழக்கங்களை எழுப்பி ஆதரவு தெரிவித்தனர்.

உலகின் வறுமையான நாடுகளுள் ஒன்றான நைஜரில், அணு ஆயுதங்களில் பயன்படுத்தப்படும் யுரேனியம் அதிகளவில் கிடைப்பதால் அந்நாட்டின் உள்விவகாரங்களில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.