மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,103 ஆக உயர்வு

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று புதிதாக 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 60 ஆயிரத்து 907 ஆக அதிகரித்துள்ளது. நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 47 ஆயிரத்து 782 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 10 ஆயிரத்து 807 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா தாக்குதலுக்கு தமிழகத்தில் இதுவரை 2,315 பேர் பலியாகியுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே 7,858 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று காலை நிலவரப்படி 245 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,103 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மதுரை மாவட்டம் கொரோனா பாதிப்பில் 3-ம் இடத்தில் உள்ளது. இதுவரை 4,677 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 138 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.