பெட்ரோல் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என போலீசார் அ றிவிப்பு

கோவை: மிரட்டல் மின்னஞ்சல்... கோவையின் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டுகள் வீசப்படும் என சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சல் வதந்தி என்பது தெரியவந்துள்ளது.

சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு நேற்றிரவு மிரட்டல் மின்னஞ்சல் வந்தவுடன், உடனடியாக கோவை போலீசார் உஷார்படுத்தப்பட்டு, பாஜக அலுவலகங்களில் சோதனை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

மற்றொருபுறம் சைபர் கிரைம் போலீசார் மிரட்டல் வந்த மின்னஞ்சல் குறித்து விசாரணை மேற்கொண்டதில், அது விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த இசக்கி என்பவரது ஐடியில் இருந்து வந்திருந்தது தெரியவந்தது.

உடனடியாக அவரையும் பிடித்து விசாரித்ததில், அது வதந்தி என்பது தெரியவந்ததாக கோவை மாநகரக் காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

இசக்கியை போலீசில் சிக்கவைக்க அடையாளம் தெரியாத நபரின் சதிச் செயலாக இருக்கலாம் என்றும் தீவிரமாக விசாரித்து வருவதாகவும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.