பிரதமரின் அதிகாரத்தையும் 20 ஆவது திருத்தத்தின் வாயிலாக இழக்கச் செய்ய முடியும்

பிரதமரின் அதிகாரத்தையும் 20 ஆவது திருத்தத்தின் மூலம் இழக்கச் செய்ய முடியுமென மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணி கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மஹிந்த ராஜபக்ச எவ்வாறான தீர்மானத்தை எடுப்பார் என்று எனக்கு தெரியாது. பிரேமதாச கூறியதைப் போல் அதிகாரமற்ற நிலைமையே பிரதமருக்கு ஏற்பட்டுள்ளது. தலைக்கு மேல் வாளொன்றை உயர்த்திக்கொண்டு இருக்கும் வகையிலான அமைச்சரவை ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.

20 ஆவது திருத்தத்தின் ஊடாக இந்த அரசாங்கம் நாகரிகத்திலிருந்து அநாகரிகத்திற்குள் பயணிக்கவே முயல்கிறது. சட்டத்தை இயற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கே உள்ளது. பாராளுமன்றச் செயற்பாடுகளில் அநாகரிமாக தலையீடு செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கவில்லை.

பாராளுமன்றத்தின் பதவிக்காலம் நான்கரை வருடங்கள் என்றே கடந்த காலத்திலும், தற்போதும் நடைமுறையிலிருக்கும் அரசியலமைப்பில் உள்ளது. ஆனால், பாராளுமன்றம் ஸ்தாபிக்கப்பட்டு ஓராண்டின் பின்னர் அதனை நீடிப்பதா? இல்லையா? என்ற தீர்மானத்தை ஜனாதிபதியே எடுப்பாரென 20 ஆவது திருத்தத்தில் புதிய சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.

உயர் நீதிமன்றத்தின் பிரதம நீதியரசர் தொடக்கம் மேல் நீதிமன்ற நீதியரசர்கள் வரை அனைவரையும் நியமிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு பேரவையிடம் இருந்தது. தற்போது அந்த சகலரையும் நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. இதனூடாக முழு நீதிமன்ற அதிகாரமும் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் திட்டம் 20 ஆவது திருத்தத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு அமைச்சரையும் நீக்கும் அதிகாரமும், அமைச்சர்களை தன் இஷ்டப்படி நியமிக்கும் அதிகாரமும் ஜனாதிபதி வசமாகின்றது. இதனால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு பழங்குடி யுகத்தில் தலைவர்களுக்கிருந்த அதிகாரங்கள் 20 ஆவது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதி பெற்றுக் கொண்டுள்ளார் எனவும் அனுரகுமார திசாநாயக்க மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.