பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கல்வித்துறையில் விவரங்களை தலைமையாசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும்

சென்னை: கொரோனா பரவல் மீண்டும் உயர்ந்து வருவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் மாஸ்க் அணிவது அவசியம் என்று கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இச்சூழலில் நடப்புக்கல்வியாண்டில், பள்ளிக்கு சரியாக வராத, இடைநின்ற மாணவர்களை கண்டறியும் பணிகளில் கல்வித்துறை மிக தீவிரமாக இறங்கியுள்ளது.

மேலும் இதுதொடர்பாக, 41 பக்கங்கள் கொண்ட உத்தரவுகளை, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ளார். அதில், ஒரு வாரத்திற்கு, 3 முதல் 4 நாட்கள் பள்ளிகளுக்கு வராத மாணவர்கள் குறித்து, கல்வித்துறையில் தலைமை ஆசிரியர் பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 வாரங்களில், 6 முதல் அதற்கும் மேலாக பள்ளிகளுக்கு மாணவர்கள் வரவில்லை எனில், வட்டார வளமைய பயிற்றுநர்கள், தங்களுக்கான பகுதியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து 3 வாரங்களில் 9 நாள் மற்றும் அதற்கும் மேலாக மாணவர்கள் வரவில்லை எனில், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அதுகுறித்த தகவலை பதிவு செய்ய வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 வாரங்களில் மாணவர்கள் முழுமையாக வரவில்லை என்றால், அவர்கள் பள்ளிக்கு வராதவர்கள், இடை நின்றவர்கள் என்று கருதப்பட்டு, அந்த மாணவர்களின் விவரங்களை தலைமை ஆசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.