இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் பதிவு செய்த இஸ்ரேல் பிரதமரின் மகன் இந்தியர்களிடம் மன்னிப்பு

இஸ்ரேல் நாட்டின் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேட்டன்யாஹூ-வின் இளைய மகன் யெய்ர்க்கு 29 வயதாகிறது. சமூக வலைதள பயன்பாட்டில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், தனது தந்தையின் அரசியல் கொள்கைகள் குறித்தும், எதிர்க்கட்சிகளை விமர்சனம் செய்தும் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை வழக்கமாக பதிவிடுவார்.

தற்போது தனது தந்தை மீதான ஊழல் வழக்கு விசாரணையில் எதிர்க்கட்சிகளை சாடும் விதமாக இந்து கடவுளான துர்கா தேவியின் முகத்துக்கு பதிலாக பெஞ்சமின் நேட்டன்யாஹூவின் வக்கீலின் முகம் பொருத்தப்பட்டு, துர்கா தேவியின் கைகள் ஆபாச சைகை காட்டுவது போல சித்தரிக்கப்பட்டிருந்த படத்தை வெளியிட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியர்கள் பலர் யெய்ரின் டுவிட்டர் பதிவில் கண்டன கருத்துகளை பதிவிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இந்நிலையில் தனது தவறை உணர்ந்த யெய்ர் சர்ச்சைக்குரிய டுவிட்டர் பதிவை நீக்கியதோடு இந்தியர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில், இஸ்ரேலிய அரசியல் பிரமுகர்களை விமர்சிக்கவும் கேலி செய்யவும் ஒரு புகைப்படத்துடன் பதிவை வெளியிட்டேன். ஆனால் அந்தப்படம் கம்பீரமான இந்து நம்பிக்கையுடன் இணைக்கப்பட்ட ஒரு படம் என்பதை நான் உணரவில்லை. அந்தப் பதிவை அகற்றிவிட்டேன். நான் மன்னிப்பு கேட்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.