பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக இராஜாங்க அமைச்சர் தகவல்

கொழும்பு: பொருளாதாரம் ஸ்திரத்தன்மை அடைந்து வருகிறது... அரசாங்கம் எடுக்கும் தீர்மானங்களினால் பொருளாதாரம் படிப்படியாக ஸ்திரத்தன்மை அடைந்து வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சவாலான தீர்மானங்கள் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையை நோக்கிச் செல்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் பணவீக்கம் குறைந்திருப்பது பொருளாதாரம் சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதற்கான அறிகுறி என்றும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

நவம்பரில் 61.0 சதவீதமாக இருந்த பணவீக்கம் டிசம்பரில் 57.2 சதவீதமாகவும் உணவுப் பணவீக்கம் நவம்பரில் 73.7 சதவீதத்திலிருந்து டிசம்பரில் 64.4 சதவீதமாகக் குறைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.