கொரோனாவால் குணமடைந்தவர்கள் மீண்டும் கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாக ஆய்வில் தகவல்

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா குறித்து பல்வேறு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரி சார்பில் கொரோனாவால் குணமடைந்த 90-க்கும் மேற்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வின் முடிவில் குணமடைந்த 3 வாரங்கள்வரை மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தி அதிகபட்ச திறனுடன் இருப்பதும், அதன்பிறகு வேகமாக குறைந்ததும் தெரிய வந்துள்ளது. 60 சதவீத நோயாளிகளுக்கு வலிமையான நோய் எதிர்ப்பு சக்தி இருந்தபோதிலும், 17 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே 3 மாதங்கள்வரை நோய் எதிர்ப்பு சக்தி நீடித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களில் நிறைய பேருக்கு 3 மாத காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 23 மடங்கு குறைந்துவிட்டது. மேலும், சிலருக்கு முற்றிலுமாக போய்விட்டது. இப்படி கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்களுக்கு பருவநிலை மாற்றத்தின்போது மீண்டும் கொரோனா தாக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது.

இதுகுறித்த ஆய்வு முடிவுகள், தடுப்பூசி கண்டுபிடிக்க உதவும் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் மூலம் கொரோனா தாக்கம் முடிந்தாலும் மீண்டும் கொரோனா வைரஸ் இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது.