பெண்களின்] திருமண வயதை உயர்த்துவது குறித்து மத்திய அரசு விரைவில் முடிவு எடுக்கும் - பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், பெண்களுக்கு குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது, இதுபற்றி ஆராய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்தார். அதன்பின், பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், உணவு மற்றும் வேளாண் அமைப்பின் 75-வது ஆண்டுவிழாவையொட்டி, ரூ.75 மதிப்புள்ள நினைவு நாணயத்தை காணொலி காட்சி வழியாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டபோது, பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது என்னவாக இருக்க வேண்டும் என்பது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை பற்றியும், அதன்மீது அரசு எப்போது முடிவு எடுக்கும் எனவும் கேட்டு நாடு முழுவதும் இருந்து பெண்களிடம் இருந்து எனக்கு நிறைய கடிதங்கள் வந்து கொண்டிருப்பதாக கூறினார்.

மேலும் அவர், இந்த குழு தனது பரிந்துரையை அளித்த உடன் அதுபற்றிய முடிவை அரசு விரைவாக எடுத்து அறிவிக்கும் என்ற உறுதியை நான் அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன். ஊட்டச்சத்து குறைபாட்டின் சவாலை சமாளிக்க ஒருங்கிணைந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை எங்கள் அரசு எடுத்துள்ளது. நாடு முழுவதும் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் அரசு 11 கோடி கழிவறைகளை கட்டி உள்ளது. குழாய் வழி குடிநீரை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்குவதற்கு ஜல்ஜீவன் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது என்று கூறினார்.

ஏழைப்பெண்களுக்கு அரசு ரூ.1 என்ற மலிவு விலையில் நாப்கின்களை வழங்குகிறது. இந்த முயற்சிகளின் பலனாக முதல் முறையாக நாட்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தில் ஆண்களை விட பெண்களின் அளவு அதிகமாக உள்ளது. விவசாய பயிர்களை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. இது நாட்டின் உணவு பாதுகாப்பில் ஒரு முக்கியமான அங்கம் ஆகும் என மோடி கூறினார்.