அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும்; டிரம்ப் கோரிக்கை

தேர்தலை தள்ளி வைக்க கோரிக்கை... அமெரிக்க அதிபர் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என டிரம்ப், திடீரென கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் நேரடியாக தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை தவிர்க்கும் நோக்கில் அஞ்சல் வாக்கெடுப்பு நடத்தலாம் என அமெரிக்காவின் 6 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் இது தொடர்பாக பல டுவிட்டர் பதிவுகளை நடத்தி உள்ள டிரம்ப், அஞ்சல் வாக்கு முறையில் மோசடி நடக்கலாம் என்றும் அது முடிவுகளை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

அஞ்சல் வாக்கெடுப்பு நடந்தால், அது அமெரிக்காவின் வரலாற்றில் மிகவும் தவறான, மோசடியான தேர்தலாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர், அமெரிக்காவிற்கு மிகப்பெரிய தர்மசங்கடம் ஏற்படும் எனவும் கூறியுள்ளார். அது மட்டுமில்லாமல் அதிபர் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் தலையிடும் அபாயமும் ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.