பெண்ணிடம் செயின் பறித்த இளைஞருக்கு பொது மக்கள் தர்ம அடி

கரூர்: செயின் பறித்த இளைஞருக்கு தர்ம அடி... கரூர் மாவட்டம், வெங்கமேட்டில் காலையில் கடையில் காய்கறி வாங்கி கொண்டு, தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுக்கும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

சோழன்நகரை சேர்ந்த சரஸ்வதி என்பவர் நேற்று காலை எஸ்.பி. காலனி பேருந்து நிறுத்தம் அருகே நடந்து வந்தபோது, இருசக்கரவாகனத்தில் வந்த இரண்டு பேரில் ஒருவன் இறங்கி வந்து சரஸ்வதியின் செயினை அறுத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் ஏற ஓடினார்.

அப்போது எதிரில் வந்த ஒருவர் இதனை பார்த்ததால், வாகனத்தில் காத்திருந்த நபர் தப்பியதையடுத்து, செயின் பறித்தவனை எதிரே வந்த நபர் மடக்கிப் பிடித்த நிலையில், அங்கு கூடிய பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து, வெங்கமேடு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த எட்வின் ராஜ் என்பதும், அவன் ஏற்கனவே பல்வேறு திருட்டு வழக்குகளில் கைதானவன் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், தப்பி சென்ற மற்றொருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.