உண்மையான மதச்சார்பின்மை இதுதான்... பிரதமர் மோடி விளக்கம்

குஜராத்: உண்மையான மதச்சார்பின்மை எது?... பாகுபாடுகள் இன்றி நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே உண்மையான மதச்சார்பின்மை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 4 ஆயிரத்து 400 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 42 ஆயிரத்து 441 வீடுகளுக்கான அடிக்கல் நாட்டப்பட்டதும் அடக்கம்.

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அரசு திட்டங்கள் 100 சதவிகிதம் மக்களை சென்றடைவதை உறுதி செய்து வருவதாகவும், இதன் மூலம் ஊழல் மற்றும் வேறுபாடுகள் அகற்றப்படுவதாகவும் கூறினார்.

இதுவே மதச்சார்பின்மை என்றார் அவர். முன்னதாக, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, குழந்தைகளுக்கு ஆரம்பக்கல்வியை அவர்களது தாய்மொழியில் வழங்குவது அவசியம் என தெரிவித்தார்.

மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் அடைய புதிய கல்வி கொள்கை வழிவகுக்கும் என்றும் அவர் கூறினார்.