சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் பலத்த மழை; வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள்

வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் அதனோடு சேர்ந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பிற்பகல் 3 மணிக்கு மேல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 3.40 மணியளவில் இருந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை வெளுத்து வாங்கியது.

வேப்பேரி, எழும்பூர், பாரிமுனை, தியாகராயநகர், அண்ணாநகர், ராயப்பேட்டை, மயிலாப்பூர், அண்ணாசாலை, வடபழனி, கிண்டி, ஆலந்தூர், திருவான்மியூர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, பரங்கிமலை, கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் உள்பட பல இடங்களில் இடியுடன் மழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. அதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர், ஊரப்பாக்கம், மாதவரம், செங்குன்றம், புழல் உள்பட பல இடங்களில் மழை பொழிந்தது.

சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால் அனைத்து சாலைகளிலும் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சில தாழ்வான இடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குள் மழைநீர் புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர். திடீர் மழையால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு மத்தியில் நனைந்தபடி சாலைகளில் பயணித்தனர்.

சாலைகளில் வெள்ளம்போல் தண்ணீர் தேங்கியதால், சில வாகனங்களில் பழுது ஏற்பட்டது. மழைவிட்டதும் பல இடங்களில் சிக்னல் கோளாறு ஏற்பட்டதால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. மழையால் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தின் 1, 2, 3 மற்றும் 4-வது ரெயில் வழித்தடங்களில் தண்ணீர் தேங்கியது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.