இந்தியாவில் இன்றைய கொரோனா பாதிப்பு சற்று குறைவு

புதுடெல்லி: இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அந்த வகையில் , இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 ஆயிரத்து 830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்று முன்தின பாதிப்பான 20 ஆயிரத்து 279 மற்றும் நேற்றைய பாதிப்பான 16 ஆயிரத்து 866-ஐ விட குறைவாகும். இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 451 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 159 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சத்து 46 ஆயிரத்து 829 ஆக உயர்ந்துள்ளது.

இதை அடுத்து நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 512 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 36 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 110 ஆக உயர்ந்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 202 கோடியே 50 லட்சத்து 57 ஆயிரத்து 717 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.