இந்த பகுதியில் நாளை முதல் ஜனவரி 15-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம்

சென்னை : சென்னை வளசரவாக்கம் பகுதியில் நாளை முதல் ஜனவரி 15-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை பெருநகர காவல் தெற்கு மாவட்டத்தின், வளசரவாக்கம் போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட திருவள்ளுவர் சாலையில், அம்மா உணவகம் முதல் சுரேஷ் நகர் சந்திப்பு வரை நெடுஞ்சாலை துறை வடிகால்வாய் கட்டும் பணி தொடங்க உள்ளது. இதனால் 26-ந் தேதி (நாளை) முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 15-ந் தேதி வரை கீழ்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே அதன்படி ஆற்காடு சாலையில் இருந்து திருவள்ளுவர் சாலை வழியாக அரசமரம் சந்திப்பு வெளிச்செல்லும் திசையில் வாகனங்கள் வழக்கம் போல் செல்லலாம்.

மேலும் திருவள்ளுவர் சாலை மெகாமார்ட் சந்திப்பில் இருந்து சுரேஷ் நகர் - வள்ளுவர் சாலை சந்திப்பு வரை ஒருவழி பாதையாக அமையும். ராமாபுரத்தில் இருந்து ஆற்காடு சாலை செல்லும் வாகனங்கள் திருவள்ளுவர் சாலையில் சுரேஷ் நகர் பிரதான சாலை சந்திப்பில் இடதுபுறமாக திரும்பி சவுத்திரி நகர் பிரதான சாலையில் வலதுபுறமாக திரும்பி ஆற்காடு சாலை கேசவர்தினி சந்திப்பை அடைந்து செல்ல வேண்டிய இடமான போரூர் அல்லது வடபழனி செல்லலாம்.

இதையடுத்து மேற்கண்ட தகவல் சென்னை பெருநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.