கொரோனா தடுப்பு மருந்து தகவல்கள் திருட்டில் ரஷியா ஈடுபடுவதாக இங்கிலாந்து குற்றச்சாட்டு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க உலகின் பல்வேறு நாடுகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சி தகவல்களை திருட முயற்சிப்பதாக ஏற்கனவே சீனா மீது அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது. தற்போது, ரஷியா மீது இங்கிலாந்து புதிய குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.

கொரோனா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வேலையில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அறிவித்தது. தற்போது ரஷியாவை சேர்ந்த ஹேக்கர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி தொடர்பான அறிவுசார் தகவல்களை திருட முயற்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் டொமினிக் கூறுகையில், இங்கிலாந்து - அமெரிக்கா இடையேயான ரகசிய வியாபார தகவல்களை திருடி இணைய தளத்தில் வெளியிட்டு அதன் மூலம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த ரஷியா முயற்சி செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என ரஷியா மறுப்பு தெரிவித்துள்ளது.