பணம் இல்லாத காரணத்தால் தபால் மூல வாக்கு சீட்டை ஒப்படைக்க முடியாத நிலை

கொழும்பு: மீண்டும் சிக்கல்... வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்குத் தேவையான பணம் இல்லாத காரணத்தினால் தபால் மூல வாக்கு சீட்டை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

வாக்குச் சீட்டுகள் அச்சிடுவதற்கு செலவாகும் பணம் இதுவரை செலுத்தப்படாததால், அதற்கான பணிகளைத் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரசாங்க அச்சக அலுவலகத்தின் பிரதானி தெரிவித்துள்ளார்.

வாக்குச் சீட்டுக்களை அச்சிட 152 மில்லியனும் ஊழியர்களின் கொடுப்பனவிற்காக 52 மில்லியன் ரூபானும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இதுவரை தம்மால் பூர்த்தி செய்யப்பட்ட அனைத்து பணிகளுக்கும் 40 மில்லியன் மட்டுமே திறைசேரியில் இருந்து செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.