பயிர் காப்பீட்டு அவகாசத்தை நீட்டிக்க .. விஜயகாந்த் வலியுறுத்தல்


சென்னை: டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுக்கான அவகாசத்தை நவ.30 வரை நீட்டிக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: டெல்டா மாவட்டங்களில் கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகை காலம் என்பதாலும், கடந்த சில நாட்களாகவே தொடர் மழை பெய்து வருவதாலும் கிராம நிர்வாக அலுவலரிடம் சிட்டா அடங்கல் பெற விவசாயிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை விவசாயிகள் நலன் கருதி வருகிற 30-ம் தேதி வரை நீட்டித்து தரவேண்டும்.



மேலும், டெல்டா பகுதிகளில் விவசாயத்துக்கு போதிய நீர்வரத்து இல்லாமல் வறட்சி நிலவியதால், மிகுந்த பாதிப்பு ஏற்பட்டு விவசாயிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர்.

எனவே, கடந்த காலங்களில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலன் கருதி, காப்பீட்டுத் தொகை முழுவதும் தமிழக அரசே செலுத்தியது போல இந்த முறையும் தமிழக அரசே ஏற்க முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.