15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தியிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை

சென்னை: மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை... சென்னையில் 15 நாட்களுக்கு மேல் ஒரே இடத்தில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் பறிமுதல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.

சென்னை புதுப்பேட்டையில், தெற்கு கூவம் பகுதியில், மெகா தூய்மை பணிகள் நடைபெறுகிறது.

இதனை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், மழைநீர் வடிகால் பாதைகளிலும் அடைப்பட்டு இருந்த குப்பையை கைகளால் அகற்றினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், சாலை ஓரங்களில் பொது இடங்களில் கட்டிடக்கழிவுகள், வாகன கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

குப்பையே பணம் உண்டாக்க கூடிய பொருள் என்று கூறிய ராதாகிருஷ்ணன், 6 ஆயிரம் டன் குப்பையில் இருந்து, ஆயிரத்து 500 கியூபிக் மீட்டர் பயோ கேஸ் உற்பத்தி செய்யப்படுவதாக தெரிவித்தார்.