உள்ளூராட்சி தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை ஒப்படைக்க எச்சரிக்கை

கொழும்பு: ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை... உள்ளூராட்சித் தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட பணத்தை 7 நாட்களுக்குள் திறைசேரி செயலாளர் மஹிந்த சிறிவர்தன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்க வேண்டும் என ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு வழங்காவிட்டால் அவருக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் உயர் நீதிமன்றத்தை நாடும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பணத்தைச் செலுத்தாவிடின், நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கருதி அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தாம் கோருவோம் என்றும் கூறியுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இந்த நிலை குறித்து அடுத்த வாரம் முதல் சர்வதேச சமூகத்திற்கும் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.