தண்ணீர் திறப்பு குறைந்தது... மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்கிறது

மேட்டூர்: மேட்டூர்அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 10,656 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 10,417 கன அடியாக சரிந்தது.

இன்று காலை நீர்வரத்து சற்று குறைந்து. அணைக்கு வினாடிக்கு 9,536 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக 5 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 600 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.

இதனிடையே, டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்துள்ளதால் நீர் திறப்பு வினாடிக்கு 2,600 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதில் நீர்மின் நிலையங்கள் மூலம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட, அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்படுவதால், அணையின் நீர்மட்டம் மெல்ல உயர்ந்து வருகிறது. நேற்று காலை 118.62 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 118.91 அடியாக உயர்ந்தது.