நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கிறோம்... எலான் மஸ்க் வேதனை

சான்பிரான்சிஸ்கோ: டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறோம். அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன்சுமை இருக்கிறது என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரை வாங்கியதில் இருந்து, எலான் மஸ்க் நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். முதலில் நிறுவன ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். நீக்கப்பட்டவர்களில் சிலர் பின்னர் ட்விட்டரில் மீண்டும் சேர்க்கப்பட்டனர். அதில் பதிவிடப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பாகவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் விளம்பரதாரர்கள் அளிக்கும் விளம்பரங்கள் படிப்படியாக குறைந்து வந்தது. முன்பு மஸ்க் மற்றும் ட்விட்டரை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் திரும்பி வருவார்கள்.

நிறுவனம் லாபகரமான பாதையில் பயணிக்கும் என்று கடந்த ஏப்ரல் மாதம் கூறியிருந்தார்.அதன் பின், விளம்பரத் துறையில் அனுபவமுள்ள லிண்டா யாக்காரினோவை புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தார்.

இருப்பினும், ஒரு நாளில் இத்தனை டுவிட்களை மட்டும் தான் பயனாளர்கள் பார்க்க முடியும் என டுவிட்டரில் சில கட்டுப்பாடுகளை விதித்தது பயனாளர்களை வருத்தமடையச்செய்தது.

தற்போது டுவிட்டரில் விளம்பரங்கள் பாதியாக குறைந்ததால் நிறுவனம் இன்னும் நஷ்டத்திலேயே இயங்கிக் கொண்டிருப்பதாக எலான் மஸ்க் கூறியுள்ளார். வணிக ஆலோசனையை வழங்கும் டுவிட்டுக்கான பதிலில் அவர் இவ்வாறு கூறினார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: டுவிட்டருக்கான விளம்பரங்கள் 50 சதவிகிதம் குறைந்ததால் நாங்கள் இன்னும் நஷ்டத்தில்தான் இயங்கிக்கொண்டிருக்கிறோம். அதேபோல டுவிட்டருக்கு அதிக அளவிலான கடன் சுமை இருக்கிறது.

வியாபாரம் சார்ந்த மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கு முன்பாக டுவிட்டரை லாபப்பாதைக்கு கொண்டு வரவேண்டும் எனக்கூறியுள்ளார். இந்த நிலையில், டுவிட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் திரெட்ஸ் என்ற புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.