என்ன செய்யலாம்? ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ்., ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளாராம்

சென்னை: சென்னை எழும்பூரில் தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் பிப்ரவரி 20-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது , “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ச. இராமச்சந்திரன் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 20-02-2023 திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

இதையடுத்து அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.” என அதில் கூறப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சார களம் சூடு பிடித்திருக்கிறது. வரும் 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்னரசு போட்டியிடுகிறார்.

அவருக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினரும், கூட்டணி கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும், இரட்டை இலை சின்னம் வெற்றிபெற வாக்கு சேகரிப்போம் என்று ஓபிஎஸ் தரப்பு தெரிவித்திருந்தது.

ஆனால் தற்போது வரை பிரச்சார களத்திற்குச் செல்லவில்லை. இந்நிலையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.